Archives: அக்டோபர் 2025

தேவனுடைய செட்டைகளின் நிழலில்

எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள குளத்தில் வாத்து குஞ்சுகளுடன் பல வாத்து குடும்பங்கள் உள்ளன. அந்த சிறிய குஞ்சுகள் மிகவும் மென்மையாகவும் அழகாகவும் இருக்கின்றன. நான் நடந்து செல்லும்போது அல்லது குளத்தைச் சுற்றி ஓடும்போது அவைகளைப் பார்க்காமல் இருக்கமுடியாது. ஆனால் நான் கண்ணில் படுவதைத் தவிர்க்கவும், வாத்துக்களுக்கு ஒரு பரந்த இடத்தைக் கொடுக்கவும் கற்றுக்கொண்டேன். இல்லையெனில், அதனுடைய பெற்றோர்கள் அதற்கு நான் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அஞ்சி என்னை துரத்தும் அபாயம் நேரிடும்.

ஒரு பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் உருவகத்தை வைத்து தேவன் தன்னுடைய பிள்ளைகளை எவ்வளவு மென்மையாய் பாதுகாக்கிறார் என்று வேதம் அறிவிக்கிறது (சங்கீதம் 91:4). சங்கீதம் 61இல், இந்த வகையான தேவனுடைய பராமரிப்பை அனுபவிக்க முடியாமல் தாவீது திணருவதை நாம் பார்க்கக்கூடும். அவர் தேவனை “அடைக்கலம்” மற்றும் “பெலத்த துருகம்” (வச. 3) என்றும் விவரிக்கிறார். அவர் தற்போது “பூமியின் கடையாந்தரத்திலிருந்து” கூப்பிட்டு, “எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2) என்று கெஞ்சுகிறார். அவர் மீண்டும் தேவனுடைய “செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்” (வச. 4) என்று உறுதியாய் அறிவிக்கிறார்.

மேலும் தனது வலியையும், குணமடைவதற்கான ஏக்கத்தையும் தேவனிடம் கொண்டுவந்து, தாவீது தனக்கு தேவன் செவிசாய்த்ததை அறிந்து ஆறுதல் அடைந்தார் (வச. 5). தேவனுடைய உண்மைத்தன்மையின் காரணமாக, அவருடைய “நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்” (வச. 8) என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தார்.

சங்கீதக்காரனைப் போலவே, நாமும் தேவனுடைய அன்பை விட்டு விலகி தொலைவில் இருப்பதை உணரும்போது, நம்முடைய வலியிலும் கூட, அவர் நம்முடன் இருக்கிறார், ஒரு தாய் பறவை தனது குட்டிகளைக் காப்பது போல் நம்மைப் பாதுகாத்து, பராமரித்து வருகிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக நாம் அவருடைய அன்பான கரங்களுக்குள் அடைக்கலம் புகலாம்.  

ஸ்மார்ட்போன் இரக்கம்

உங்களுக்கு வாகனத்தில் உணவு கொண்டுவருபவர் தாமதமாக வந்தாரா? அவருக்கு ஒரு நட்சத்திர மதிப்பீட்டை வழங்க உங்களது மொபைலைப் பயன்படுத்தலாம். கடைக்காரர் உன்னிடம் குறும்பாக நடந்து கொண்டாரா? நீங்கள் அவளுக்கு ஒரு விமர்சன மதிப்பாய்வை எழுதலாம். ஸ்மார்ட்போன்கள், ஷாப்பிங் செய்ய, நண்பர்களுடன் பழக, மேலும் பலவற்றைச் செய்ய உதவும் அதே வேளையில், அவை ஒருவருக்கொருவர் மதிப்பிடும் சக்தியையும் கொடுக்கின்றது. மேலும் இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

ஒருவரையொருவர் இவ்வாறு மதிப்பிடுவது சிலவேளைகளில் சிக்கலாகவும் இருக்கிறது. ஏனெனில் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல் மதிப்பீடுகள் வழங்கப்படலாம். ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டை மீறிய சூழ்நிலை காரணமாக தாமதமாய் உணவுகொண்டுவந்ததற்காக மோசமாக மதிப்பிடப்படுகிறார். தன்னுடைய நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் இரவு முழுவதும் விழித்திருந்ததினால் கடைக்கார பெண் எதிர்மறையான விமர்சனத்தைப் பெறுகிறார். மற்றவர்களை இப்படி அநியாயமாக மதிப்பிடுவதை எப்படி தவிர்க்கலாம்?

தேவனுடைய சுபாவத்தை தத்தெடுப்பதின் மூலம் இதைத் தவிர்க்கக்கூடும். யாத்திராகமம் 34:6-7 இல், தேவன் தன்னை “இரக்கமும், கிருபையும்” உள்ளவராக காண்பிக்கிறார். அதாவது சூழ்நிலை புரியாமல் நம்முடைய தோல்விகளை அவர் நியாயந்தீர்க்கமாட்டார். “நீடிய சாந்தம்” உள்ளவர் - அதாவது, ஒரு தவறு நிகழ்ந்த மாத்திரத்தில் அதை எதிர்மறையாய் மதிப்பிடமாட்டார். “மகா தயையும்” கொண்டவர் - அதாவது அவருடைய சிட்சைகள் நமது நன்மைக்காகவே, பழிவாங்குவதற்காக அல்ல. “பாவத்தையும் மன்னிக்கிறவர்” - அதாவது நமது வாழ்க்கையை நமது ஒரு நட்சத்திர அந்தஸ்தினால் வரையறுக்க வேண்டியதில்லை. தேவனுடைய குணாதிசயமே நம்முடைய அடிப்படையாக இருக்க வேண்டும் (மத்தேயு 6:33). கிறிஸ்துவின் சுபாவத்தை செயல்படுத்துவதின் மூலம் ஸ்மார்ட்ஃபோன்களின் கடுமையான தன்மையைத் தவிர்க்கலாம்.

ஆன்லைன் யுகத்தில், நாம் அனைவரும் மற்றவர்களை கடுமையாக மதிப்பிடலாம். இன்று ஒரு சிறிய இரக்கத்தைக் கொண்டுவர பரிசுத்த ஆவியானவர் நமக்கு கிருபையளிப்பாராக! 

நீங்கள் தேவனை விசுவாசிக்கலாம்

என் பூனை மிக்கிக்கு கண் தொற்றுநோய் ஏற்பட்டபோது, தினமும் கண்களில் சொட்டு மருந்து போட்டேன். அதை நான் இருக்கையில் அமர்த்தி அதற்கு சொட்டு மருந்து போட முயற்சிக்கும்போது, அது சரியாய் உட்கார்ந்து, அந்த மருந்தை வாங்கிக்கொள்வதற்காக தன்னுடைய கண்களை திறந்து காண்பிக்கும். “நல்ல பையன்” என்று அதற்கு பாராட்டுக்கொடுப்பேன். நான் என்ன செய்கிறேன் என்பது அதற்கு புரியவில்லை என்றாலும், அது ஒருபோதும் குதிக்கவோ, சீண்டவோ அல்லது என்னைக் கீறவோ முயற்சிக்கவில்லை. மாறாக, அது என்னிடமாய் நெருங்கி வருவதற்கே முயற்சித்தது. அது சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. என்னை அதனால் நம்ப முடியும் என்பது அதற்கு நன்றாய் தெரியும்.

தாவீது, சங்கீதம் 9ஐ எழுதியபோது, தேவனின் அன்பையும் உண்மைத்தன்மையையும் அவர் ஏற்கனவே அனுபவித்திருக்கவேண்டும். அவர் தன்னுடைய எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தேவனை நாடுகிறார். தேவனுடைய அவருடைய சார்பில் செயல்படுகிறார் (வச. 3-6). தாவீதின் தேவையின் போது, தேவன் அவரை கைவிடவில்லை. இதன் விளைவாக, தாவீது தேவன் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்கிறார். அவர் வல்லமையும் நீதியும், அன்பும் உண்மையும் கொண்டவர். அதனால் தாவீது தேவனை நம்புகிறார். தேவன் நம்பகமானவர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

நான் மிக்கியை அதன் சிறுபிராயத்தில் தெருவில் ஒரு பட்டினி கிடக்கும் பூனைக்குட்டியாகக் கண்ட இரவு முதல், பல நோய்கள் தருவாயில் அதை கவனித்துக்கொண்டேன். அதனால்; நான் அவருக்குப் புரியாத விஷயங்களைச் செய்தாலும் கூட, என்னை நம்ப முடியும் என்று அதற்குத் தெரியும். இதேபோல், தேவன் செய்யும் சில காரியங்களை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் அவர் இதுவரை செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து அவரை அணுகுவது நல்லது. வாழ்க்கையில் கடினமான தருணங்களில் தேவனையே நம்ப முற்படுவோம்.  

பொன்னைக் காட்டிலும் விலையேறப்பெற்ற

நீங்கள் எப்போதாவது ஒரு கண்காட்சி விற்பனையில் குறைந்த விலை பொருட்களை வாங்கி, அது நம்பமுடியாத விலைமதிப்புள்ள ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுண்டா? கனெக்டிகட்டில் நடந்த ஒரு மலர் வடிவம்கொண்ட சீன பழங்கால கிண்ணம் வெறும் 35 டாலருக்கு (சுமார் 2800 ரூபாய்) வாங்கப்பட்டது. அதே கிண்ணம், 2021 ஏலத்தில் 700,000 டாலருக்கு (கிட்டத்தட்ட 6 கோடி இந்திய ரூபாய்) விற்கப்பட்டது. இந்த கிண்ணம் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து ஒரு அரிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலைப்பொருளாக மாறியது. சிலர் சிறிய மதிப்புடையதாகக் கருதுவது உண்மையில் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கும் என்பதற்கு இது ஒரு அற்புதமான உதாரணம்.

உலகம் முழுவதும் பரவியுள்ள விசுவாசிகளுக்கு எழுதும்போது, பேதுரு இயேசுவின் மீதான அவர்களின் நம்பிக்கை எல்லா கலாச்சாரத்தினராலும் நிராகரிக்கப்பட்ட ஒருவர் மீதான நம்பிக்கை என்று விளக்குகிறார். பெரும்பாலான யூத மதத் தலைவர்களால் வெறுக்கப்பட்டு, ரோமானிய அரசாங்கத்தால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து அவர்களின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றாததால், பலரால் பிரயோஜனமற்றவராகக் கருதப்பட்டார். ஆனால் மற்றவர்கள் இயேசுவின் மதிப்பை நிராகரித்த போதிலும், அவர் “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய” (1 பேதுரு 2:4) மதிப்பு மிக்கவராய் திகழ்ந்தார். நமக்கான அவரது மதிப்பு வெள்ளி அல்லது தங்கத்தை விட விலையேறப்பெற்றது (1:18-19). மேலும், இயேசுவை நம்புவதற்குத் தேர்ந்தெடுக்கும் எவரும் தங்கள் விருப்பத்தைப் பற்றி ஒருபோதும் வெட்கப்படமாட்டார்கள் என்ற உறுதி நமக்கு இருக்கிறது (2:6).

மற்றவர்கள் இயேசுவை மதிப்பற்றவர் என்று நிராகரிக்கும்போது, நாம் வேறுவிதத்தில் பார்ப்போம். கர்த்தருடைய ஆவியானவர் கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற பரிசைக் காண நமக்கு உதவுவார். அவர் தேவ குடும்பத்தின் ஒரு அங்கத்தினராய் மாறுவதற்கான விலைமதிப்பற்ற அழைப்பை எல்லாருக்கும் கொடுக்கிறார் (வச. 10). 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஞானமுள்ள மகிழ்ச்சியை கண்டறிதல்

தொற்றுநோய் ஜெயமெடுத்துக்கொண்டிருந்தது. கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற உறுதிபூண்டுள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் அவசர அறை மருத்துவருக்கு அப்படித்தான் தோன்றியது. அவர் எப்படி சிறந்ததை கொடுக்க முடியும்? அந்த சிரமத்தின் மத்தியில், பனிக்குமிழிகள் புகைப்படத்தை பெரிதாக்கி தன் மகிழ்ச்சியை தேடிக்கொண்டார். இது முட்டாள்தனமாய் தெரிகிறது என்று அந்த மருத்துவர் கூறுகிறார். ஆனால் சிறிய ஆனால் அழகான ஒன்றில் மகிழ்ச்சியைக் கண்டறிவது என்பது, “என்னுடைய சிருஷ்டிகரோடு பிணைக்கப்படுவதற்கும், ஒரு சிலரால் மட்டும் பார்க்கக்கூடிய வகையில் இந்த உலகத்தை பிரம்மாண்டமாய் பார்க்க நம்மை தூண்டுகிறது” என்று அந்த மருத்துவர் குறிப்பிடுகிறார்.

இந்த வழிகளில் மகிழ்ச்சியை தேடுவது என்பது, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நெகிழ்ச்சியை வளர்ப்பதற்கும் இந்த மருத்துவத் தொழிலில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று மருத்துவர் கூறுகிறார். அவர் “அனைவரும் மூச்சிவிடுவது அவசியம்; அதற்கு நேரம் ஒதுக்கி வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவியுங்கள்” என்று எல்லோருக்கும் ஆலோசனை கொடுக்கிறார்.

சங்கீதக்கான் தாவீது இந்த எண்ணத்தை சங்கீதம் 16 இல் வெளிப்படுத்துகிறார். “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்” என்றும் “ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்” (வச. 5,9) என்று குறிப்பிடுகிறார்.

தங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு இன்று மக்கள் பல வழிகளை கையாளுகின்றனர். ஆனால் இந்த மருத்துவரோ தன்னை சிருஷ்டிகருக்கு நேராய் திசை திருப்பும் ஞானமான மகிழ்ச்சியின் பாதையை கண்டுபிடித்தார். “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு” (வச. 11). அவரில் நாம் நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிக்கிறோம்.

 

தேவனுடைய பொறுமையான அன்பு

எங்களின் அழகான, பஞ்சுபோன்ற பூனைக்கு, வயிற்றைத் தடவி அதனுடன் விளையாடும் போதோ, மாலையில் அது என் மடியில் உறங்கும் போதோ, சில வருடங்களுக்கு முன்பு நாம் சந்தித்த அதே பூனை தான் அது என்று நம்புவது சில சமயங்களில் கடினமாக இருக்கும். எனது செல்லப் பூனை, எடை குறைவாகவும், அனைவருக்கும் பயந்தும் தெருக்களில் வாழ்ந்து வந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் நான் அதற்கு உணவு வைக்க ஆரம்பித்தவுடன் அது படிப்படியாக உருமாற்றம் அடைந்தது. ஒரு நாள் அது என்னுடைய செல்லப்பிராணியாய் மாறியது. மீதியெல்லாம் வரலாறே.

என் பூனையின் மாற்றம் பொறுமை மற்றும் அன்புடன் வரக்கூடிய சிகிச்சைமுறையின் நினைவூட்டலாகும். ஏசாயா 42-ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, தேவனுடைய இருதயத்தை அது எனக்கு நினைவூட்டுகிறது. அங்கு, அவருடைய ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு ஊழியக்காரனைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது (வச. 1). அவர் தேவனுடைய நியாயத்தை பூமியிலே நிலைப்படுத்தும் வரை உண்மையாய் செயல்படுவார் (வச. 3-4).

அந்த ஊழியக்காரர் இயேசுவே (மத்தேயு 12:18-20). அவர் வன்முறையின் மூலமாகவோ அல்லது அதிகாரத்தைத் தேடுவதன் மூலமாகவோ தேவனுடைய நீதியை நிலைநாட்டமாட்டார். மாறாக, அவர் அமைதியாகவும், மென்மையாகவும் இருப்பார் (ஏசாயா 42:2). மற்றவர்களால் கைவிடப்பட்டவர்களை, காயமடைந்தவர்களை மென்மையாகவும் பொறுமையாகவும் கவனித்துக்கொள்வார் (வச. 3).

தேவன் தனது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. காயப்பட்ட நம் இருதயங்கள் இறுதியாக குணமடையத் தொடங்கும் வரை அவற்றை எல்லா நேரங்களிலும் கவனித்துக்கொள்கிறார். அவருடைய மென்மையான, பொறுமையான அன்பின் மூலம் நாம் படிப்படியாக மீண்டும் ஒருமுறை நேசிக்கவும் நம்பவும் கற்றுக்கொள்கிறோம். 

 

தேவனுடைய குடும்பத்தில் ஒட்டவைக்கப்பட்டது

சில ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தையுடன் அவருக்கு பிரியமான சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, அவர் வளர்ந்த குடும்பப் பண்ணைக்குச் சென்றோம். விசித்திரமான மரங்களின் கூட்டத்தை நான் கவனித்தேன். அவர் சிறுவனாக இருந்தபோது குறும்புசெய்தபோது, ஒரு பழ மரத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு கிளையை எடுத்து, வேறு வகையான பழ மரத்தில் பிளவுகளை உருவாக்கி, பெரியவர்கள் செய்வது போல் தளர்வான கிளையை தண்டுடன் கட்டுவார் என்று என் அப்பா சொன்னார். அந்த மரங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான பழங்களைத் தரத் தொடங்கும் வரை அவருடைய குறும்புகள் கவனிக்கப்படாமல் இருந்திருக்கிறது.

என் அப்பா தாவரங்களுக்கு செய்யும் செயல்முறையை விவரித்தது போல், தேவனுடைய குடும்பத்தில் நாம் ஒட்டப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றிய ஒரு சித்திரம் எனக்கு கிடைத்தது. என் மறைந்த தந்தை பரலோகத்தில் இருப்பதை நான் அறிவேன். ஏனென்றால் அவர் இயேசுவின் மீது வைத்த விசுவாசத்தின் மூலம் தேவனுடைய குடும்பத்தில் இணைக்கப்பட்டார்.

இறுதியில் பரலோகத்திலும் இருப்போம் உறுதியை நாம் பெறலாம். புறஜாதிகள் அல்லது யூதரல்லாதவர்கள் தம்முடன் சமரசம் செய்துகொள்ள தேவன் ஒரு வழியை உருவாக்கினார் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமில் உள்ள விசுவாசிகளுக்கு விளக்கினார்: “காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்...” (ரோமர் 11:17). நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடன் இணைக்கப்பட்டு, தேவனுடைய குடும்பத்தின் ஒரு அங்கமாக மாறுகிறோம். “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்” (யோவான் 15:5).

ஒட்டவைக்கப்பட்ட மரங்களைப் போலவே, கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை வைக்கும்போது, நாம் ஒரு புருசிருஷ்டியாக மாறி, அதிக பலனைக் கொடுக்கிறோம். 

.